இலங்கையில் தற்போது பசளைகளை விநியோகிக்கும் பணியில் இருந்து அரசாங்கமானது விலகி தனியாரிடம் அப் பணியை ஒப்படைப்பது தொடர்பில் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு அடிமைகளாக மாறுவதற்கான ஓர் செயலாக அமையும் என வன்னி விவசாயத் தலைவர் முத்து சிவமோகன் எச்சரித்துள்ளார்.
2023ஆம் ஆண்டில் பெரும்போகத்திற்கான பசளைகள் விநியோகிக்கும் பணியிலிருந்து அரசாங்கம் விலகி, அப் பணியைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அண்மையில் கூறி இருந்தார். குறித்த அறிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு முத்து சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (11.04.2023) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறியது, இரசாயன மற்றும் சேதனப் பசளைகள், விதைகள் மற்றும் இதர விவசாய உள்ளீட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகளுக்கு நிதி நிவாரணங்கள் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள அரசாங்கம், நாட்டை கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்காக அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கும் தனியார் மயமாக்குவதற்கும் தயார் என ஏற்கனவே அறிவித்துள்ளது.
விவசாயிகளின் அனைத்து பொறுப்புகளையும் அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கினால், உற்பத்தி செயன்முறை மாத்திரமல்ல, சந்தைப்படுத்தல் தொடர்பாகவும் அந்த நிறுவனங்கள் தான் அனைத்து முடிவுகளும் எடுக்கும்.
அதைத் தவிர,நாட்டில் எந்தளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதையும் எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள்,எங்கள் உற்பத்தி பொருளின் விலையை அவர்கள் நிர்ணயிப்பார்கள். தயாரிப்பு நுகர்வோர் சந்தைக்குச் செல்லும்போது, அவர்களே அந்த விலையையும் தீர்மானிப்பார்கள்.
எனவே விவசாயம் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் எதிர்காலத்தில் நிலத்தின் மீதான உரிமையை விவசாயிகள் இழக்க நேரிடும் என இதன் போது எச்சரித்துள்ளர் விவசாயிகள் சங்கத் தலைவர், எதிர்காலத்தில் விவசாயிகள் தனியார் நிறுவனங்களின் கீழ் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Advertisement

FOR SHOPPING VIST – SANGAPALAKAI.COM